ருது: பூப்படைதல்

Thursday 30 October 2014
ருது: பூப்படைதல்


தமிழ்நாட்டில் ஒரு பெண் பூப்படைந்திருக்கிறாள் என்பதை சில பெண்களைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றனர். இந்த உறுதிப்படுத்தும் நிகழ்வை பூப்படைந்த பெண்ணின் தாயைத் தவிர பிறரே செய்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறாள். 
இந்த தனிமைக் காலத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு உண்ண தனித் தட்டு, போன்றவையும், படுக்கத் தனிப்படுக்கையும் அளிக்கப்படுகின்றன. (தற்போது இந்நிலை சிறிது மாற்றமடைந்துள்ளது.).பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் புரோகிதர்களைக் கொண்டு புனிதச் சடங்கும் அதைத் தொடர்ந்து அவரவர் சாதிக் கட்டுப்பாடுகளுக்கேற்ப குடும்பச் சடங்கும் நடத்தப்படுகின்றன. இந்தச் சடங்குகள் தமிழ்நாட்டிலுள்ள பகுதி மற்றும் சாதிகளுக்கு ஏற்ப சிறிது மாறுபடுகின்றன. இவ்விழாவை பூப்புனித நீராட்டு விழா என்கின்றனர்.

புனிதச் சடங்கு


பெண்கள் பூப்படையும் நிகழ்வைத் தீட்டாகக் கருதி அவளைப் புனிதப்படுத்துவதற்காக புரோகிதர்களைக் கொண்டு ஒரு புனிதச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தப் புனிதச் சடங்கில் புரோகிதர்கள் செய்யும் சடங்குடன் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் விருப்பத்தின்படி கூடுதல் சடங்குகளைச் செய்வதுண்டு.
பூப்படைந்த பெண்ணை ஒரு இடத்தில் அமரச் செய்து அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு வாழை இலை போட்டு, அதில் நெல் போட்டு அதன் மேல் மற்றொரு வாழை இலை போட்டு அதில் அரிசி போட்டு அதையும் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் மூன்று செம்புகளில்(கும்பம்) தண்ணீர் நிரப்பி அதில் மாஇலை, பூக்கள் போட்டு வைக்கப்படுகிறது. மஞ்சளைக் கொண்டு உருட்டி பிள்ளையார் உருவமாக வைத்து புரோகிதர் வழிபாடுகளைத் தொடக்குகிறார். அதன் பிறகு புரோகிதரால் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு யாகம் வளர்க்கப்படுகிறது. பின்னர் பூப்படைந்த பெண் அங்கிருக்கும் பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்கிறார்.
இந்த யாகத்தின் முடிவில் தரையில் அரிசி மாவுப் பொடியால் மூன்று கோடுகளுடனான சதுர வடிவம் வரையப்படுகிறது. சதுரத்தின் நான்கு மூலைப்பகுதியிலும் நான்கு விளக்குகள் வைக்கப்பட்டு அனைத்துத் திரிகளிலும் தீபமேற்றப்படுகிறது. நான்கு மூலைகளிலும் இவற்றிற்கிடைப்பட்ட மத்தியப் பகுதியிலும் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப்பழம் வைக்கப்பட்டு நடுவில் பூப்படைந்த பெண் உட்கார வைக்கப்படுகிறாள். அதன் பின்பு நான்கு விளக்குகளும் நூலால் இணைக்கப்படுகின்றன. இப்போது புரோகிதர் மீண்டும் வேத மந்திரங்களை உச்சரிக்கிறார். பிறகு தாய்மாமன் மனைவியைக் கொண்டு ஒரு தீபத்தின் மூலம் நான்கு விளக்குகளையும் இணைத்த நூல் நான்கு மத்தியப் பகுதியில் துண்டிக்கப்படுகிறது.
இதன் பிறகு புரோகிதர் கும்பத்திலிருக்கும் புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிக்கிறார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருப்பவர்கள் அனைவர் மீதும் தெளிக்கப்படுகிறது. பின்பு வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்புனித நீர் தெளித்துப் புனிதப்படுத்தப்படுகிறது.

குடும்பச் சடங்கு


புரோகிதர் புனித நீர் தெளித்துச் சென்றதும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள்த்தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டுகின்றனர். இதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண் அலங்கரிக்கப்படுகிறாள். 
பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் அல்லது அத்தை மகளுக்கு (சிறுமிக்கு) ஆணுக்கான உடை அணிவிக்கப்பட்டு மாப்பிள்ளையாக்கப்படுகிறாள்.பூப்படைந்த பெண்ணிற்கு தாய்மாமன் மனைவியும், மாப்பிள்ளை வேடமணிந்த சிறுமிக்கு பூப்படைந்த பெண்ணின் தாயும் மாலை அணிவிக்கின்றனர். அதன் பிறகு பெண்கள் சேர்ந்து அவர்களுக்குரிய சடங்குகள் செய்து ஆசிர்வதிக்கின்றனர்.

இனி ருது கால (பூப்படைதல்) பலனும் அதன் விவரமும் பார்க்களாம்.

0 comments:

Post a Comment