ருது: மாதபலன்

Thursday 30 October 2014
ருது: மாதபலன்


நமது புராதான ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லாத விஷயங்களே இல்லை,அதுபோல இல்லாத விஷயங்களே இல்லை. நமது அன்றாட நிகழ்வுகளை கூட முறைப்படி எப்படி செய்யவேண்டும் என சொல்லி சென்றுள்ளனர். அதில் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் பூப்படைதல்(ருது) பற்றியும், பூப்படைதல் நிகழ்ந்த நேரம் கொண்டு அதற்கான பலாபலன்களையும் கூறியிருக்கின்றனர்.

சித்திரை மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் அது புருசனுக்கு ஆகாது. இம்மாதத்தில் ருது ஆன பெண் பரிகாரம் செய்துகொள்வது மிக அவசியம்.

வைகாசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் சுகமாயிருப்பள். இம்மாதத்தில் ருது ஆன பெண்ணிற்க்கு அனைத்துவித நன்மைகளும் கிட்டும்.

ஆனி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திர சம்பத்தாயிருப்பாள். அதாவது புத்திரவிருத்தி பெற்று சுகமாக வாழ்வாள்.

ஆடி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் அவள் பல புருஷரையிச்சிப்பாள். அதாவது பல ஆடவரை கூடுவாள். இவர்களும் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

ஆவணி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் நல்ல குழந்தைகளைப் பெறுவாள்.

புரட்டாசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் விருத்திபுத்தியுடையவள். அதாவது புத்திக்கூர்மை , கீர்த்தி உடையவள்.

ஐப்பசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திரருண்டாகி விதவையாவாள். அதாவது குழந்தைபேறுக்கு பின் கணவனை இழக்க நேரிடும். இவர்களும் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

கார்த்திகை மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் பலரையும் தூஷிப்பாள். இவர்களும் பரிகாரம் செய்வது அவசியம்.

மார்கழி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் நல்ல குழந்தைகளை பெறுவாள்.

தை மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் புண்ணியஞ் செய்பவளாயிருப்பாள்.

மாசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் திரவியமுண்டாயிருப்பாள். அதாவது பொன்,பொருள் என அனைத்து சுகங்களையும் அனுபவிப்பாள்.

பங்குனி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் வெகு குழந்தைகளை பெறுவாள். அதாவது அதிக குழந்தைகள் உண்டாகும் பாக்கியம் கிட்டும்.









பரதேசம் (நாடு விட்டு நாடு செல்லுதல்)

பரதேசம் (நாடு விட்டு நாடு செல்லுதல்)


பாரப்பா ஈராறோன் இருநான்கோனும்

பகருகின்ற செவ்வாயும் மூவர்சேர்ந்து

கூறப்பா யெவ்விடத்தில் கூடிட்டாலும்

கொற்றவனே பரதேசம் போவான் காளை

சீரேனீ சுந்திரனும் கண்ணுற்றாலும்

சிலகாலந் தங்கிருந்து செம்பொன்தேடி

ஆரப்பா அவன் பதியில் வந்துவாழ்வன்

அப்பனே புலிப்பாணி அரைந்திட்டேனே

இன்னுமொரு விஷயத்தையும் சொல்லுகிறேன் நன்கு விளக்கமாக இதனையும் நீ கேட்பாயாக! 12க்குடையவனும் எட்டுக்குடையோனும் சேர்ந்து செவ்வாயுடன் மூவரும் சேர்ந்து எந்த இடத்தில் கூடிநின்றாலும் அவன் பரதேசம் செல்வான். இவர்களைச் சந்திரன் கண்ணுற்றாலும் சில காலம் அங்கே தங்கியிருந்து வெகுதனம் தேடி மீண்டும் அவனது சுயதேசத்தில் வந்து வாழ்வான் என போகமா முனிவரது பேரருட் கரணையால் புலிப்பாணி கூறினேன்.
 

ஊர் ஊராக சுற்றுபவர்

ஊர் ஊராக சுற்றுபவர் 


பாரப்பா பரமகுரு சனியும் பாம்பும்

பலமாக சரஉபய மமர்ந்து நிற்க

சீரப்பா சென்மனுமே ஊரைவிட்டு

சிவசிவா சிலகாலந் தேசஞ்செல்வன்

கூறப்பாகுடி நாதன் வலுத்திருக்க

கொற்றவனே குமரனுந்தான் குடியில்வந்து

வீரப்பா வெகுகாலம் வாசஞ்செய்வன்

விளம்பினேன் புலிப்பாணி விளம்பக்கேளே

போகமா முனிவரருள் பெற்ற புலிப்பாணி கூறும் இக்கருத்தையும் நன்கு ஓர்ந்து கவனிப்பாயாக! பிரசித்தமான பரம சுகமளிக்கும் குருபகவானும் சனியும் பாம்பும் பலமுள்ளவராக சரம், உபயம் அமர்ந்து நிற்க அச்சென்மன் சிவ பரம்பொருளின் பேரருளால் தன் இருப்பிடத்தை விட்டு தேசாந்தரம் செல்வான். நீ மிகவும் ஆராந்து கூறுவாயாக. இலக்னாதிபதி வலுத்திருந்தால் முருகப்பெருமானின் அருளால் அவன் அவனது குடியில் வந்து வெகுகாலம் வாசம் செய்வான் என்றும் உணர்த்துவாயாக.
 



ருது: பூப்படைதல்

ருது: பூப்படைதல்


தமிழ்நாட்டில் ஒரு பெண் பூப்படைந்திருக்கிறாள் என்பதை சில பெண்களைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றனர். இந்த உறுதிப்படுத்தும் நிகழ்வை பூப்படைந்த பெண்ணின் தாயைத் தவிர பிறரே செய்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறாள். 
இந்த தனிமைக் காலத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு உண்ண தனித் தட்டு, போன்றவையும், படுக்கத் தனிப்படுக்கையும் அளிக்கப்படுகின்றன. (தற்போது இந்நிலை சிறிது மாற்றமடைந்துள்ளது.).பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் புரோகிதர்களைக் கொண்டு புனிதச் சடங்கும் அதைத் தொடர்ந்து அவரவர் சாதிக் கட்டுப்பாடுகளுக்கேற்ப குடும்பச் சடங்கும் நடத்தப்படுகின்றன. இந்தச் சடங்குகள் தமிழ்நாட்டிலுள்ள பகுதி மற்றும் சாதிகளுக்கு ஏற்ப சிறிது மாறுபடுகின்றன. இவ்விழாவை பூப்புனித நீராட்டு விழா என்கின்றனர்.

புனிதச் சடங்கு


பெண்கள் பூப்படையும் நிகழ்வைத் தீட்டாகக் கருதி அவளைப் புனிதப்படுத்துவதற்காக புரோகிதர்களைக் கொண்டு ஒரு புனிதச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தப் புனிதச் சடங்கில் புரோகிதர்கள் செய்யும் சடங்குடன் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் விருப்பத்தின்படி கூடுதல் சடங்குகளைச் செய்வதுண்டு.
பூப்படைந்த பெண்ணை ஒரு இடத்தில் அமரச் செய்து அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு வாழை இலை போட்டு, அதில் நெல் போட்டு அதன் மேல் மற்றொரு வாழை இலை போட்டு அதில் அரிசி போட்டு அதையும் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் மூன்று செம்புகளில்(கும்பம்) தண்ணீர் நிரப்பி அதில் மாஇலை, பூக்கள் போட்டு வைக்கப்படுகிறது. மஞ்சளைக் கொண்டு உருட்டி பிள்ளையார் உருவமாக வைத்து புரோகிதர் வழிபாடுகளைத் தொடக்குகிறார். அதன் பிறகு புரோகிதரால் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு யாகம் வளர்க்கப்படுகிறது. பின்னர் பூப்படைந்த பெண் அங்கிருக்கும் பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்கிறார்.
இந்த யாகத்தின் முடிவில் தரையில் அரிசி மாவுப் பொடியால் மூன்று கோடுகளுடனான சதுர வடிவம் வரையப்படுகிறது. சதுரத்தின் நான்கு மூலைப்பகுதியிலும் நான்கு விளக்குகள் வைக்கப்பட்டு அனைத்துத் திரிகளிலும் தீபமேற்றப்படுகிறது. நான்கு மூலைகளிலும் இவற்றிற்கிடைப்பட்ட மத்தியப் பகுதியிலும் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப்பழம் வைக்கப்பட்டு நடுவில் பூப்படைந்த பெண் உட்கார வைக்கப்படுகிறாள். அதன் பின்பு நான்கு விளக்குகளும் நூலால் இணைக்கப்படுகின்றன. இப்போது புரோகிதர் மீண்டும் வேத மந்திரங்களை உச்சரிக்கிறார். பிறகு தாய்மாமன் மனைவியைக் கொண்டு ஒரு தீபத்தின் மூலம் நான்கு விளக்குகளையும் இணைத்த நூல் நான்கு மத்தியப் பகுதியில் துண்டிக்கப்படுகிறது.
இதன் பிறகு புரோகிதர் கும்பத்திலிருக்கும் புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிக்கிறார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருப்பவர்கள் அனைவர் மீதும் தெளிக்கப்படுகிறது. பின்பு வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்புனித நீர் தெளித்துப் புனிதப்படுத்தப்படுகிறது.

குடும்பச் சடங்கு


புரோகிதர் புனித நீர் தெளித்துச் சென்றதும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள்த்தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டுகின்றனர். இதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண் அலங்கரிக்கப்படுகிறாள். 
பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் அல்லது அத்தை மகளுக்கு (சிறுமிக்கு) ஆணுக்கான உடை அணிவிக்கப்பட்டு மாப்பிள்ளையாக்கப்படுகிறாள்.பூப்படைந்த பெண்ணிற்கு தாய்மாமன் மனைவியும், மாப்பிள்ளை வேடமணிந்த சிறுமிக்கு பூப்படைந்த பெண்ணின் தாயும் மாலை அணிவிக்கின்றனர். அதன் பிறகு பெண்கள் சேர்ந்து அவர்களுக்குரிய சடங்குகள் செய்து ஆசிர்வதிக்கின்றனர்.

இனி ருது கால (பூப்படைதல்) பலனும் அதன் விவரமும் பார்க்களாம்.

ஸ்திரீ முலம் தனசேர்க்கை யாருக்கு?

ஸ்திரீ முலம் தனசேர்க்கை யாருக்கு?


கூடினேன் கரும்பாம்பு செவ்வாய் நீலன்

கொற்றவனே ஓரிடத்திற் கூடிநிற்க

தெடினேன் தையலிட பொருளுஞ்சேரும்

திடமான மனையுமது கட்டுவானாம்

சூடினேன் சுகமுண்டு சென்மனுக்கு

சுருதிமொழி பிசகாது சிலகாலத்தில்

ஆடினேன் அழுதாலும் வினையும்போமோ

அப்பனே அமடுகளுந் திடமாய்ச்சொல்லே

இன்னுமொரு செய்தியையும் நீ கேட்பாயாக! கரும் பாம்பு எனச் சொல்லப்படும் இராகுவும், செவ்வாயும் நீலன் எனும் சனிபகவானும் ஒருமனையில் கூடிநிற்க ஸ்திரீகளால் தனசேர்க்கை ஏற்படும். கீர்த்திமிகு வீடு கட்டுவான். அச்சென்மனுக்கு சுகம் உண்டு. எனது சற்குருவான போகமகா முனிவரது பேரருட்கருணையால் நான் கூறும் இம்மொழி தவறாது. எனினும் சில வேளைகளில் அழுதாலும் ஊழ்வினைப் பயன் விட்டுப் போகுமா என்ன? எனவே சிற்சில அமடுகளும் (துன்பங்களும்) வந்து சேரும் என்று திடமாகச் சொல்வாயாக.
 

யோகம்

Wednesday 29 October 2014
யோகம்


கேளப்பா ஈரைந்தில் முகோள் நிற்க

கெதியுள்ள சன்னியாசி யோகம்யோகம்

ஆளப்பா அத்தலதில் இருகோள் நிற்கில்

அப்பனே தபசியடா யோகிஞானி

கூளப்பா ஒரு கோளும் குணமாய்நிற்கில்

குவலயதில் புனிதனடா ஞானியோகி

வீளப்பா விண்ணுலகத் தேவரோடு

விதமாக வீற்றிருப்பான் ரிஷிகளோடே

இன்னுமொரு கருத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் மூன்று கிரகங்கள் நிற்க கெதிதருகின்ற சன்னியாசி யோகம் என்பர். அதே பத்தாம் இடத்தில் இரண்டு கிரகங்கள் இருப்பின் தபசியாகவும், யோகியாகவும், ஞானியாகவும் இருப்பான். மற்றும் அதே இடத்தில் ஒரு கோள் பலம் பெற்று குணமாக இணக்கத்துடன் நின்றால் அவன் அந்நிலவுலகில் புனிதனாகவும் ஞானியாகவும் யோகியாகவும் விளங்குவதோடு விண்ணுலகில் உள்ள தேவர்களோடு சகல வரிசைகளுடன் ரிஷிகளின் கூட்டத்துடன் உடன் உறைவான்.


ஶ்ரீ துர்க்கை வசியன்

ஶ்ரீ துர்க்கை வசியன்


தாமென்ற அம்புலிக்கு நாலாமாதி

தயவாக லெக்கினத்து நாலோன் தானும்

யேனென்ற யெவ்விடத்தில் கூடிட்டாலும்

இதமாக அசுரகுரு இணங்கி நிற்க

தேனென்ற தேவிபரா துர்க்கை பூசை

திடமாகச் செய்திடுவன் வராகியோடு

கோனென்ற கொடியோர்கள் எதிர்நில்லார்கள்

கொற்றவனே வசியனடா கூறுகூறே

சிறப்புடைய சந்திரனுக்கு நான்கிற்குடையவனும் அதே போல் இலக்கினத்திற்கு நான்கிற்குடையவனும் இராசி மண்டலத்தில் எவ்விடத்தில் கூடி நின்றாலும், அதற்கு இதமாக அசுர குரு இணங்கி நிற்கவும், தேன் போன்று இனிமை செய்யும் தேவி பராசக்தி என்ற துர்க்கை மீது பேரன்பு பூண்டு பூசை செய்வதோடு வராகி பூஜையும் இணக்கமுறச் செய்வோன் என்றும் எத்தகைய சூழ்ச்சிகளும் கொடியவர்களும் இவனுக்கு எதிர் நிற்க மாட்டார்கள் என்றும் இவனே தேவதை வசியன் என்று திடமாகக் கூறுக.
 

தேவதை வசியம் செய்பவன்

தேவதை வசியம் செய்பவன்


ஆமென்ற செவ்வாயும் ராகுமாந்தி

அப்பனே ரெண்டோனைக் கூடிநிற்கில்

போமென்ற பூதலத்தில் பரமன்பூசை

புகழ்பெரிய அய்யனோடு ருத்திரன் ருத்திரி

ஓமென்ரே ஓங்காளி வீரபத்திரன்

ஓதிடுவன் ஆகாச மாடந்தானும்

தாமென்ற போகருட கடாட்சத்தாலே

தப்பாமல் செய்திடுவன் சென்மந்தானே

இன்னுமொன்று கூறுகிறேன் கேட்பாயாக! செவ்வாயும் ராகுவும் மாந்தியுடன் இலக்கினத்திற்கு இரண்டிற்குரியவனைக் கூடி நிற்பின் அச்சென்மன் இப்பூதலத்தில் சிவ பூஜையும், பெரிய புகழ் உடைய ஐயனார். மற்றும் உருத்திரன், உருத்திரி, ஓங்கார வடிவினளாம் காளி மற்றும் வீரபத்திரன் மற்றும் ஆகாசமாடன் ஆகியோருடைய பூஜைகளையும் செய்யும் தேவதை வசியன் என்று போகருடைய கருணையாலே புலிப்பாணி கூறினேன்.
 

இந்நிலவுலகத்தில் தேவர் யார்?

இந்நிலவுலகத்தில் தேவர் யார்?


பாரப்பா இரு ஐந்தில் புந்திநிற்க

பகருகின்ற பரமகுரு யேழில்நிற்க

ஆரப்பா அசுரகுரு யெட்டில் நிற்க

அப்பனே மீனத்தில் அருக்கன் பிள்ளை

வீரப்பா வில்வளவில் சேயும் நிற்க

விளங்குகின்ற மற்றோர்கள் யெங்கும்நிற்க

கூறப்பா குமரனையுங் கண்டுங்காணார்

குவலயதில் தேவனென்று கூறினேனே

மற்றொரு கருத்தையும் நீ கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தில் புதன் நிற்க எல்லாராலும், புகழ்ப்படும் குரு பகவான் ஏழாம் இடத்தில் நிற்க அதே நேரத்தில் அசுர குருவான சுக்ராச்சாரியார் எட்டில் நிற்க அப்பனே! மீனத்தில் சூரியகுமாரனான சனியும், தனுசில் செவ்வாயும் நிற்கவும், பிற இடங்களில் வேறு கிரகங்கள் நிற்கவும் பிறந்த குமாரனைப் பிறர் கண்டும் காணார் என்றும் இந்நிலவுலகத்தில் தேவன் அவனே என்றும் போகமா முனிவரின் கருணாகடாட்சம் பெற்ற புலிப்பாணி கூறினேன்.
 

சூரியன் & சந்திரனுடன் சீறுகின்ற பாம்பு

Sunday 26 October 2014
சூரியன் & சந்திரனுடன் சீறுகின்ற பாம்பு



பாரப்பா பதினைந்து நாளிலேயும்

பகருகின்ற பால்மதியும் வெய்யோனைத்தான்

சீரப்பா சீறியே அரவந்தீண்டில்

செத்திடுவர் போர்முகத்தில் அனந்தம்மன்னர்

ஊரப்பா ஊரெங்கும் பேதி அம்மை

உத்தமனே கவுமாரி யாலேசீக்கு

பாரப்பா மன்னர்களு மடியாவிட்டால்

மகத்தான அன்னமது அரிதாம், பாரே


இன்னொரு கருத்தையும் நன்கு கவனிப்பாயாக! வளருகின்ற கலையால் பதினைந்து நாள்களில் உயர்வு பெறும் சந்திரனையும் மற்றும் சூரியனையும் (இராகு கேது ஆகிய) பாம்பு சீறித் தீண்டும் சீர் பெறில் போர் முகத்தில் அனெகம் மன்னர் இறந்தொழிவர்; ஊரெங்கும் கொள்ளை நோயும், அம்மை பேதி போன்ற தீய வியாதிகளும் கெளமாரியின் கருணையினால் உத்தமனே வந்து வாய்க்கும். அவ்வாறு மன்னர்கள் மடியாவிடின் பெருமைக்குரிய அன்னமது கிடைப்பது அரிதாகிப் போகும். 

தாரை யோகம்

தாரை யோகம்


பாரப்பா பால்மதிக்கும் நான்கில்வெள்ளி

பாங்குள்ள வெள்ளிக்கு நான்கில் இந்து

ஈரப்பா இல்லுக்கு இவர்கள்நான்கில்

இடிபோலே குமுறுமடா தாரையோகம்

சீரப்பா சென்மனுக்கு சிவிகைகிரீடி

சிறப்பான வாகனமும் நிலமும் செம்பொன்

கூறப்பா போகருட கடாட்சத்தாலே

குடினாதன் பெலமறிந்து கூறுவாயே.

புலிப்பாணி போக மகா முனிவரின் பேரருட் கருணையாலே கூறுகின்ற மற்றொரு கருத்தையும் நீ கேட்பாயாக! வளர்பிறைச் சந்திரனுக்கு நான்கில் சுக்கிரனும் அதே போல் சுக்கிரனுக்கு நான்கில் மதியும் நிற்கவும் அல்லது இலக்கினத்திற்கு நான்கில் இவர்கள் இருப்பினும் இடிமுழக்கம் செய்து வருவது போலக் குமுறிக் கொண்டு வரும் தாரை யோகம் ஆகும். இப்படிப்பட்ட சிறப்புடைய அமிசம் பெற்ற சாதகனுக்கு சிவிகையும்,விளைவயல் மற்றும் சிறப்பான வாகன யோகமும் நிலமும், செம்பொன்னும் நிறைந்த அளவில் வந்து சேரும். இதனை இலக்கினாதிபதியின் பலம் அறிந்து கூறுவாயாக



சகடயோகம்

Saturday 25 October 2014
சகடயோகம்


சீரே நீகுருவுக்கு வியமாறெட்டில்

செழுமதியும் மதிலிருக்க சகடயோகம்

ஆரே நீ அமடுபயம் பொருளும் நஷ்டம்

அப்பனேபேர் விளங்கும் நிதியுமுள்ளோன்

கூறே நிகுருவுக்கு கேந்திரகோணம்

குழவிக்கு நிதி கல்வி மெத்தவுண்டு

பாரே நீபோகருட கடாக்ஷத்தாலே

பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே

நான் கூறும் ஒரு சிறப்பினையும் நீ குறித்துக் கேட்பாயாக. குருபகவானுக்குப் பன்னிரண்டு, எட்டு, ஆறு ஆகிய இடங்களில் சிறந்த சந்திர பகவான் இருக்க ஏற்படுவது சகடயோகம் ஆகும். அதனால் ஏற்படும் பலன்கள் என்னவெனின் அமடு, பயம், பொருட்சேதம், எனினும் நற்கீர்த்தியே வாய்க்கும். நிதியும் சிறந்து காணும். இன்னுமொன்று குரு 1,4,7,10 மற்றும் 1,5,9 ஆகிய இடங்களில் இருக்க அச்சாதகனுக்கு கல்விச்சிறப்பு மெத்தவும் உண்டாகும். எனது சற்குருவான போகமாமுனிவரது கருணா கடாட்சத்தை முன்னிறுத்தி நான் (புலிப்பாணி) இதனைப் பதமாகப் கூறினேன்.
 



உச்சம் பெற்ற லக்னாதிபதி நன்மை தருவாரா!!

உச்சம் பெற்ற லக்னாதிபதி நன்மை தருவாரா!!



கேளப்பா குடினாதன் ஆட்சிஉச்சம்

கெட்டவர்கள் கண்ணுற்று நோக்கினாலும்

சூளப்பா சுகமில்லை களவுபோகும்

சோரு துணிக்குக் கையேந்தி நிற்கச்செய்யும்

ஆளப்பா அகத்திலே துன்பங்காணும்

அப்பனே அரண்மனையார் பகையுண்டாகும்

கூளப்பா கூட்டுறவு பிரிந்து போகும்

கொற்றவனே கொடுந்துன்பம் விளையும் பாரே.

இன்னொரு கருத்தையும் நீ உன்னிப்பாகக் கவனித்துக் கேட்பாயாக. இலக்கினாதிபதி ஆட்சி உச்சம் எய்திடினும் தீயகோள்கள் பார்வை பெறின் அச்சாதகனின் இல்லத்தில் களவு போகும். அவன் சோற்றுக்கும் துணிக்கும் கையேந்தி நிற்கும் நிலையும் ஏற்படும். அவன் மனையில் துன்பமே மிகும். அரசாங்கப்பகையும் அவனுக்கு உண்டாகும். கூட்டு வாணிகம் புரிந்தவர்களும் கூட்டுறவோடு இருந்தவர்களும் பிரிவர். கொடுந்துன்பம் விளையும் என்பதையும் குறித்துச் சொல்வாயாக.

கொடிமாலை மச்சம் யாருக்கு?

கொடிமாலை மச்சம் யாருக்கு?


கூறப்பா குருவோடு வெய்யோன் பாம்பு

கொற்றவனே குருமனையில் கூடி நிற்க

சீரப்பா சென்மனுக்கு தோஷமில்லை

செப்புகிறென் கொடிமாலை விழுகாதப்பா

ஆரப்பா அங்கத்தின் மச்சமுண்டு

அப்பனே அரவோடு அனலன்சேர

கூறப்பா கொடிமாலை மச்சமுண்டு

கொற்றவனே குழவிக்குக் கூறுவாயே.

சாதகனுக்குப் பலனுரைக்கும் சோதிடனே! தேவகுருவான பிரகஸ்பதியின் ஆட்சி வீடுகளான தனுசு, மீனம் ஆகிய மனைகளில் அவரோடு அரவும் சூரியனும் சேர்ந்து நிற்க அச்சாதகனுக்கு எந்த ஒரு தோடமும் இல்லை. கொடிமாலை கழுத்தில் சூடிக் (குழந்தை) பிறப்பதில்லை. ஆனால் உடலில் மச்சமுண்டு. ஆனால் குருவின்றி அரவோடு அனல எனப்படும் சூரியன் சேர்ந்தால் கொடி மாலை மச்சம் உண்டாம் என்று கூறுவாயாக.
 


உபய ராசி: பாதகஸ்தானம்

Friday 24 October 2014
உபய ராசி: பாதகஸ்தானம்


செப்புவாய் உபயத்தில் செனித்தபேர்க்கு

சிறந்ததொரு சப்தமனு மாகாதாப்பா

ஒப்புவாய் உலகத்தில் அவதிமெத்த

ஊழ்வினையைத் தடுபாரு முலகிலுண்டோ

தப்புவாய்திடல் நாசம் தனமும் நாசம்

தார்வேந்தர் பகையுமுண்டு தேகதுன்பம்

இப்புவியில் போகருடன் கடாஷத்தாலே

இடமறிந்து திசையறிந்து யியம்புவாயே.

உபயராசியில் ஜனித்த ஜாதகருக்கு சப்தம கேந்திராதிபதி நற்பலன்களைத் தரமாட்டார். அதனால் அவனியில் மிகுந்த அவதியுண்டாகும். ஊழ்வினைத் தடுக்கவல்லவர் உலகில் யாரே உளர்? (இல்லையன்றோ) கிடைக்கத் தக்க வருவாய் கிடைக்காமல் போதலும் தொழில் நாசமும், தன நாசமும், அரசர் பகையும் தேகத்தில் நோய் உபாதைகள் ஏற்படுதலும் நேரும். எனினும் கிரக நிலவரத்தை நன்கு ஆராய்ந்தறிந்து என் சற்குருவான போகர் அருளாணையாலே நான் கூறும் கருத்தினை திசாபுக்தி தெரிந்து கூறுவாயாக.

(சர ராசிகள்:   மேஷம்,கடகம், துலாம்,மகரம்
ஸ்திர ராசிகள்: ரிஷபம, சிம்மம், விருட்சகம்,கும்பம்
உபய ராசிகள்:  மிதுனம், கன்னி, தனுசு, மீனம்)

இந்த மூன்று விதமான ராசிகளில் எந்த ராசியை லக்னமாக கொண்டுள்ளார்களோ அதற்குரிய பாதகஸ்தானமும் பலனும் சொல்லப்பட்டிருக்கிறது. 

உதாரணம்: மேஷம் லக்னம் என்பது சரராசி:பாதகஸ்தானம் 11ம் இடம்.